பாகம்1 பாகம்2 பாகம்3பாகம்4பாகம்5வாட்சை பார்த்தேன்...
மணி ஐந்து ஐம்பது....
திவ்யா வீட்டு தோட்டத்திற்கு அருகில் சமீபித்திருந்தேன்...ஆழமாக ஒருமுறை மூச்சை உள்ளிழுத்துக்கொண்டேன்...
கண்கள் விரைவாக அலைபாய்ந்தன....
மனம் ஆத்மார்த்தமாக திவ்யா - திவ்யா - திவ்யா என்று கூவிக் கூப்பாடு போட்டு குட்டிகலாட்டா கொண்டிருந்தது.
தோட்டத்தில் தானே இருப்பேன் என்று சொன்னாள்...எங்கே போனாள் என் பட்டாம்பூச்சி என்று மனது கிடந்து அடித்துக் கொண்டிருந்தது...
கீழ்வானம் சிவந்து - தானும் ஏதோ திவ்யாவைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிற மாதிரி சில வெண் மேகக் கூட்டங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன..
திவ்யா வீட்டு தோட்டம் - ஒரு சிறிய கட்டிடம் - மின்சார மோட்டாருடன் - சில சீத்தாப்பழ மரங்கள் - ஒரு பெரிய வேப்ப மரம் சூழ்ந்தது..
பெரிய கிணறு - அதில் எங்கள் காதலை போல தளும்பி, நிரம்பி வழியும் நீர்...
தோட்டம் முழுமையும் பசுமையான எலுமிச்சை மரங்கள் - அதனூடாக சில தேக்கு மரங்கள் என்று ரம்மியமாக இருந்தது...
எலுமிச்சை மரங்களூடாக நடந்து கொண்டிருந்தேன்...
க்ரீச்..க்ரீச்...என்று பூச்சிகளின் சப்தம் தவிர ஒன்றுமில்லை..காரணம் திவ்யா வீட்டு நிலம் மற்றும் தோட்டம் - அதன் பிறகு - வனத்துறையால் பராமரிக்கும் நீலகிரி காடு - பிறகு தரிசு நிலங்கள் கொண்ட காடு.. மேட்டுப்பகுதி... சொல்லப் போனால் திவ்யா வீட்டு தோட்டம் தான் அந்த கிராமத்தில் கடைசி - பயிர் செய்யக் கூடிய நிலம்...
அதற்கு பிறகு காடு போல் அடர்ந்த பாறைகள் நிறைந்த தரிசுப் பகுதி... நரிகளும் கூட உண்டு அங்கே...
சிறு கல் ஒன்று முதுகை தாக்கியது....
அடிங்ங்ங்...என்று இயற்கையாக எழும் கோபத்தோடு, சட்டென திரும்பி பார்த்தேன்...
கூடையில் இருந்து உதிர்ந்த ஒற்றை மலர் போல - எலுமிச்சை மரத்துக்கருகில் - கீழ்வானத்தின் சிவந்த நிறத்தையும் , எலுமிச்சையின் மஞ்சள் நிறத்தையும் - மிக்ஸியில் போட்டு அடித்த ஜூஸ் மாதிரி - கூட்டிக் கலந்த நிறத்தில் தேவதை போல்
திவ்யா...
திடீர் என சம்மந்தம் இல்லாமல் - கவிதை ஒன்று ஞாபகம் வந்தது...
பூஞ்சோலை இல்லாத ஊரில் குடியிருந்தேன் என்று நினைத்திருந்தேன்..
உன்னை பார்க்கும் வரை....
மெல்ல சிரித்துக் கொண்டேன்...
ஏன் சிரிக்கிறீங்க...இது அவள்....
சும்மா தான்...ஒரு கவிதை ஞாபகம் வந்திட்டது...என்றேன்...
என்ன கவிதை...என்றாள்...
சொன்னேன்...
அவளும் சிரித்துக் கொண்டாள்...கவிதை எல்லாம் கூட எழுதுவீங்களா ?
இல்லைமா - எங்கோ படிச்சது...
DONT CALL ME AMMA...திவ்யான்னு கூப்பிடுங்க...(என்ன இவ, மின்சாரக்கனவு திருட்டு வி.சி.டி ல பார்த்திருப்பாளோ !!!)
சரி சரி...
இங்கே நிற்க வேண்டாம், அந்த சின்ன பாறைக்கு பின்னால் தான் நான் எப்போதும் உட்காந்து தனிமையை ரசிச்சிக்கிட்டே கவிதை எழுதுவேன்...அங்கே போலாம்..என்றாள்..
சரி திவ்யா - அங்கேயே போயிடலாம்...
மேலும் ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்து படுத்தி எடுத்தது...அதை அப்போது திவ்யாவிடம் சொல்லவில்லை என்றாலும் இப்போது வாசகர்களுக்கு சொல்லிவிட எண்ணுகிறார் குமார்...
என்ன கவிதை அது....
" உலகிலேயே மிகச் சிறிய கவிதை..உன் பெயர்..." ( டேய், சுட்டது போதும்..சுயமா சிந்திக்க தெரியாதா...)
அந்தச் சிறு பாறை - எங்களுக்காகவே ஆண்டவன் படைப்பில் உருவான கருப்பு கவிதை போல் இருந்தது...
ஆளுயர சிறு பாறை - சாலையில் செல்பவர்களுக்கு பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் பற்றி தெரியாது...
பின்னால் இருப்பது - பார்க்கில் உள்ளது போல் இயற்கையே அமைத்த ஒரு பெஞ்ச்..அதில் அமர்ந்தால் கண்ணுக் கெட்டிய தூரம் வரை வனம்...ஏற்கனவே வாசகர்களிடம் சொல்லிய வனத்துறையால் பராமரிக்கப்படும் - தரிசு நிலக்காடு...
அங்கே ஏற்கனவே திவ்யா கொண்டுவந்த ஒரு சிறு டிபன் பாக்ஸ் - ஒரு சிறிய டைரி...
இந்த டைரி உங்களுக்காக கொண்டு வந்தேன்...என்றாள்...(இன்னும் உள்ளது என்னோடு)
என்ன இருக்கிறது அதில்...
என் கவிதைகள்...என்றாள்...
நீயே ஒரு கவிதை...நீ எதற்கு எழுத வேண்டும் கவிதை...ஹி ஹி என்று வழிசல் காமெடி செய்தேன்...
கீழ் வானத்திற்கு போட்டியாக - அவள் தோட்டத்தில் அவள் அப்பன் காய்கறிகாரன் விதைத்து, விளைந்து, கனிந்திருந்த தக்காளிகளுக்கு போட்டியாக - அவள் கன்னம் சிவந்தது...(பறித்து வித்துறப்போறான்...)
சிறிய டிபன் பாக்ஸில் - எங்க மாடு கன்னு போட்டிருக்கு... சீம்பால்... அம்மாவிடம் கிருந்திகாவுக்கு கொடுக்கனும் என்று வாங்கி வந்தேன்...என்றாள்...(இந்த பொய் எப்படிதான் கிளம்புமோ தெரியாது...ஆனால் மூஞ்சியை மட்டும் ஒன்னுமே தெரியாதமாதிரி வைத்துக்கொள்ளுவார்கள் இந்த பெண்கள்..)
மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடித்தாயிற்று....பிறகு, நம்மாளு கொண்டுவந்ததாச்சே...
எல்லாம் சாப்பிட்டீங்களே...இளமாறன் ரோட்ல பார்த்து கேட்டார்..அவருக்கும் கொண்டுபோவீங்கன்னு தான் நிறைய கொண்டுவந்தேன்...
அவன் சாப்பிடமாட்டானே...(அந்த நாய்க்கு எதுக்கு சீம்பால்.., நேத்து ஒரு தம்மு குடுரான்னதுக்கு என்ன ஆர்ப்பாட்டம் செய்துது)
குமார்..உங்களுக்கு பாட்டு பாடத் தெரியுமா ? என்றாள்...
ம்ம்ம்....இது நான்...
எந்த பாட்டு பிடிக்கும்...அதை பாடுங்க...என்றாள்..
திரும்ப திரும்ப கட்டாயப்படுத்தியதில்...
புதிய முகத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில்...(டீக்கடையில் இருந்த ஓக்கே ஒக்க சினிமா கேஸட்..இளங்கோ அண்ணன் எப்போ பார்த்தாலும் கந்தா, கடம்பா, கதிர்வேலான்னு ஏதாவது சாமி பாட்டை போட்டு கொடுமைப்படுத்துவார்..)
ஜூலை மாதம் வந்தால்..
ஜோடி சேரும் வயசு..
மாலை நேரம் வந்தால்...
பாட்டு பாடும் மனசு..
ஹே..அச்சம் நாணம் என்பது...ஹைதர் காலப்பழசு...
முத்து முத்தம் போடவா...(ஹே வெட்கம் ) ரத்த சுத்தம் புதுசு...
புதியதல்ல முத்தங்கள் இனி பொய்யாய் வேஷம் போடாதே..
உள்ளமெல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே..
காடு மலைகள் தேசங்கள் காண்போமா காற்றைக் கேள்...
வீடு வேண்டாம் கூடொண்று கேட்போமா காட்டைக் கேள்...
அட..குமார்..அருமையா பாடுறீங்க...என்றாள் என்னவள்...
திவ்யா..சும்மா சொல்ல வேண்டாம்...என்றேன்...
அட உண்மையா தான் சொன்னேன் குமார்...என்றாள்...
பலகதைகள் பேசி...
வெளிச்சம் குறையும் வரை அவள் டைரியிலிருந்து கவிதைகள் படித்து...
மணி பார்த்த போது ஏழு...
குமார்...வீட்டுல கிருத்திகா வீட்டுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்..கிளம்ப வேண்டும் என்றாள்...
கிளம்ப எத்தனித்த போது...
கையில் டார்ச் லைட்டுடன் - இருவர் பாதையை விட்டு விலகி - திவ்யா தோட்டத்துக்கு வருவது தெரிந்தது...
பரபரப்பாக சொன்னாள்...அய்யோ அது எங்க அப்பாவும் அண்ணாவும்...(இந்த இத்துப்போனவனுங்க இப்போ ஏன் வர்ரானுங்க)
அவள் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது...
இப்போது பாதைக்கு போக வேண்டும் என்றால்...அவர்களை தாண்டித்தான் போக வேண்டும்...எதிரில் காடு...பின்னால் திவ்யாவின் அப்பாவும் அண்ணாவும்...
திக்கு தெரியாமல் தவித்தேன்...
இதயம் பட பட என்று துடிக்க ஆரம்பித்தது...
அவள் கைகளை கெட்டியாக பற்றிக் கொண்டு...காட்டை நோக்கி பார்த்தேன்..
தொலைவில்..நரி ஒன்று...ஊஊஊஊஊஊஊ என்று ஊளையிட்டு அமைதியை கிழித்தது....
..காதல் பயணம் தொடரும்...