Tuesday, November 21, 2006

கேரளத்து பைங்கிளி - வெட்டிப்பையன் கவிதைக்கு



கேரளத்து பைங்கிளி - புதிய வரவு...மடலில் வெட்டிப்பயல் சொன்னார், என் கவுஜைக்கு கூட காரணம் இந்த சிட்டு தான் என்று...சரி நீங்களும் ரசிக்கட்டுமே என்று தருகிறேன் படத்தை...



இந்தாங்க இன்னொன்னு



நான் ரசித்த படம்.

Sunday, November 19, 2006

Thursday, November 09, 2006

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 6

பாகம்1 பாகம்2 பாகம்3
பாகம்4
பாகம்5

வாட்சை பார்த்தேன்...

மணி ஐந்து ஐம்பது....

திவ்யா வீட்டு தோட்டத்திற்கு அருகில் சமீபித்திருந்தேன்...ஆழமாக ஒருமுறை மூச்சை உள்ளிழுத்துக்கொண்டேன்...

கண்கள் விரைவாக அலைபாய்ந்தன....

மனம் ஆத்மார்த்தமாக திவ்யா - திவ்யா - திவ்யா என்று கூவிக் கூப்பாடு போட்டு குட்டிகலாட்டா கொண்டிருந்தது.

தோட்டத்தில் தானே இருப்பேன் என்று சொன்னாள்...எங்கே போனாள் என் பட்டாம்பூச்சி என்று மனது கிடந்து அடித்துக் கொண்டிருந்தது...

கீழ்வானம் சிவந்து - தானும் ஏதோ திவ்யாவைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிற மாதிரி சில வெண் மேகக் கூட்டங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன..

திவ்யா வீட்டு தோட்டம் - ஒரு சிறிய கட்டிடம் - மின்சார மோட்டாருடன் - சில சீத்தாப்பழ மரங்கள் - ஒரு பெரிய வேப்ப மரம் சூழ்ந்தது..

பெரிய கிணறு - அதில் எங்கள் காதலை போல தளும்பி, நிரம்பி வழியும் நீர்...

தோட்டம் முழுமையும் பசுமையான எலுமிச்சை மரங்கள் - அதனூடாக சில தேக்கு மரங்கள் என்று ரம்மியமாக இருந்தது...

எலுமிச்சை மரங்களூடாக நடந்து கொண்டிருந்தேன்...

க்ரீச்..க்ரீச்...என்று பூச்சிகளின் சப்தம் தவிர ஒன்றுமில்லை..காரணம் திவ்யா வீட்டு நிலம் மற்றும் தோட்டம் - அதன் பிறகு - வனத்துறையால் பராமரிக்கும் நீலகிரி காடு - பிறகு தரிசு நிலங்கள் கொண்ட காடு.. மேட்டுப்பகுதி... சொல்லப் போனால் திவ்யா வீட்டு தோட்டம் தான் அந்த கிராமத்தில் கடைசி - பயிர் செய்யக் கூடிய நிலம்...

அதற்கு பிறகு காடு போல் அடர்ந்த பாறைகள் நிறைந்த தரிசுப் பகுதி... நரிகளும் கூட உண்டு அங்கே...

சிறு கல் ஒன்று முதுகை தாக்கியது....

அடிங்ங்ங்...என்று இயற்கையாக எழும் கோபத்தோடு, சட்டென திரும்பி பார்த்தேன்...

கூடையில் இருந்து உதிர்ந்த ஒற்றை மலர் போல - எலுமிச்சை மரத்துக்கருகில் - கீழ்வானத்தின் சிவந்த நிறத்தையும் , எலுமிச்சையின் மஞ்சள் நிறத்தையும் - மிக்ஸியில் போட்டு அடித்த ஜூஸ் மாதிரி - கூட்டிக் கலந்த நிறத்தில் தேவதை போல்

திவ்யா...

திடீர் என சம்மந்தம் இல்லாமல் - கவிதை ஒன்று ஞாபகம் வந்தது...

பூஞ்சோலை இல்லாத ஊரில் குடியிருந்தேன் என்று நினைத்திருந்தேன்..
உன்னை பார்க்கும் வரை....

மெல்ல சிரித்துக் கொண்டேன்...

ஏன் சிரிக்கிறீங்க...இது அவள்....

சும்மா தான்...ஒரு கவிதை ஞாபகம் வந்திட்டது...என்றேன்...

என்ன கவிதை...என்றாள்...

சொன்னேன்...

அவளும் சிரித்துக் கொண்டாள்...கவிதை எல்லாம் கூட எழுதுவீங்களா ?

இல்லைமா - எங்கோ படிச்சது...

DONT CALL ME AMMA...திவ்யான்னு கூப்பிடுங்க...(என்ன இவ, மின்சாரக்கனவு திருட்டு வி.சி.டி ல பார்த்திருப்பாளோ !!!)

சரி சரி...

இங்கே நிற்க வேண்டாம், அந்த சின்ன பாறைக்கு பின்னால் தான் நான் எப்போதும் உட்காந்து தனிமையை ரசிச்சிக்கிட்டே கவிதை எழுதுவேன்...அங்கே போலாம்..என்றாள்..

சரி திவ்யா - அங்கேயே போயிடலாம்...

மேலும் ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்து படுத்தி எடுத்தது...அதை அப்போது திவ்யாவிடம் சொல்லவில்லை என்றாலும் இப்போது வாசகர்களுக்கு சொல்லிவிட எண்ணுகிறார் குமார்...

என்ன கவிதை அது....

" உலகிலேயே மிகச் சிறிய கவிதை..உன் பெயர்..." ( டேய், சுட்டது போதும்..சுயமா சிந்திக்க தெரியாதா...)

அந்தச் சிறு பாறை - எங்களுக்காகவே ஆண்டவன் படைப்பில் உருவான கருப்பு கவிதை போல் இருந்தது...

ஆளுயர சிறு பாறை - சாலையில் செல்பவர்களுக்கு பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் பற்றி தெரியாது...

பின்னால் இருப்பது - பார்க்கில் உள்ளது போல் இயற்கையே அமைத்த ஒரு பெஞ்ச்..அதில் அமர்ந்தால் கண்ணுக் கெட்டிய தூரம் வரை வனம்...ஏற்கனவே வாசகர்களிடம் சொல்லிய வனத்துறையால் பராமரிக்கப்படும் - தரிசு நிலக்காடு...

அங்கே ஏற்கனவே திவ்யா கொண்டுவந்த ஒரு சிறு டிபன் பாக்ஸ் - ஒரு சிறிய டைரி...

இந்த டைரி உங்களுக்காக கொண்டு வந்தேன்...என்றாள்...(இன்னும் உள்ளது என்னோடு)

என்ன இருக்கிறது அதில்...

என் கவிதைகள்...என்றாள்...

நீயே ஒரு கவிதை...நீ எதற்கு எழுத வேண்டும் கவிதை...ஹி ஹி என்று வழிசல் காமெடி செய்தேன்...

கீழ் வானத்திற்கு போட்டியாக - அவள் தோட்டத்தில் அவள் அப்பன் காய்கறிகாரன் விதைத்து, விளைந்து, கனிந்திருந்த தக்காளிகளுக்கு போட்டியாக - அவள் கன்னம் சிவந்தது...(பறித்து வித்துறப்போறான்...)

சிறிய டிபன் பாக்ஸில் - எங்க மாடு கன்னு போட்டிருக்கு... சீம்பால்... அம்மாவிடம் கிருந்திகாவுக்கு கொடுக்கனும் என்று வாங்கி வந்தேன்...என்றாள்...(இந்த பொய் எப்படிதான் கிளம்புமோ தெரியாது...ஆனால் மூஞ்சியை மட்டும் ஒன்னுமே தெரியாதமாதிரி வைத்துக்கொள்ளுவார்கள் இந்த பெண்கள்..)

மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடித்தாயிற்று....பிறகு, நம்மாளு கொண்டுவந்ததாச்சே...

எல்லாம் சாப்பிட்டீங்களே...இளமாறன் ரோட்ல பார்த்து கேட்டார்..அவருக்கும் கொண்டுபோவீங்கன்னு தான் நிறைய கொண்டுவந்தேன்...

அவன் சாப்பிடமாட்டானே...(அந்த நாய்க்கு எதுக்கு சீம்பால்.., நேத்து ஒரு தம்மு குடுரான்னதுக்கு என்ன ஆர்ப்பாட்டம் செய்துது)

குமார்..உங்களுக்கு பாட்டு பாடத் தெரியுமா ? என்றாள்...

ம்ம்ம்....இது நான்...

எந்த பாட்டு பிடிக்கும்...அதை பாடுங்க...என்றாள்..

திரும்ப திரும்ப கட்டாயப்படுத்தியதில்...

புதிய முகத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில்...(டீக்கடையில் இருந்த ஓக்கே ஒக்க சினிமா கேஸட்..இளங்கோ அண்ணன் எப்போ பார்த்தாலும் கந்தா, கடம்பா, கதிர்வேலான்னு ஏதாவது சாமி பாட்டை போட்டு கொடுமைப்படுத்துவார்..)

ஜூலை மாதம் வந்தால்..
ஜோடி சேரும் வயசு..
மாலை நேரம் வந்தால்...
பாட்டு பாடும் மனசு..

ஹே..அச்சம் நாணம் என்பது...ஹைதர் காலப்பழசு...
முத்து முத்தம் போடவா...(ஹே வெட்கம் ) ரத்த சுத்தம் புதுசு...

புதியதல்ல முத்தங்கள் இனி பொய்யாய் வேஷம் போடாதே..
உள்ளமெல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே..

காடு மலைகள் தேசங்கள் காண்போமா காற்றைக் கேள்...
வீடு வேண்டாம் கூடொண்று கேட்போமா காட்டைக் கேள்...

அட..குமார்..அருமையா பாடுறீங்க...என்றாள் என்னவள்...

திவ்யா..சும்மா சொல்ல வேண்டாம்...என்றேன்...

அட உண்மையா தான் சொன்னேன் குமார்...என்றாள்...

பலகதைகள் பேசி...

வெளிச்சம் குறையும் வரை அவள் டைரியிலிருந்து கவிதைகள் படித்து...

மணி பார்த்த போது ஏழு...

குமார்...வீட்டுல கிருத்திகா வீட்டுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்..கிளம்ப வேண்டும் என்றாள்...

கிளம்ப எத்தனித்த போது...

கையில் டார்ச் லைட்டுடன் - இருவர் பாதையை விட்டு விலகி - திவ்யா தோட்டத்துக்கு வருவது தெரிந்தது...

பரபரப்பாக சொன்னாள்...அய்யோ அது எங்க அப்பாவும் அண்ணாவும்...(இந்த இத்துப்போனவனுங்க இப்போ ஏன் வர்ரானுங்க)

அவள் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது...

இப்போது பாதைக்கு போக வேண்டும் என்றால்...அவர்களை தாண்டித்தான் போக வேண்டும்...எதிரில் காடு...பின்னால் திவ்யாவின் அப்பாவும் அண்ணாவும்...

திக்கு தெரியாமல் தவித்தேன்...

இதயம் பட பட என்று துடிக்க ஆரம்பித்தது...

அவள் கைகளை கெட்டியாக பற்றிக் கொண்டு...காட்டை நோக்கி பார்த்தேன்..

தொலைவில்..நரி ஒன்று...ஊஊஊஊஊஊஊ என்று ஊளையிட்டு அமைதியை கிழித்தது....

..காதல் பயணம் தொடரும்...

Tuesday, November 07, 2006

ஆதலினால் காதல் செய்தேன்..பாகம் 5

பாகம்1 பாகம்2 பாகம்3
பாகம்4

கட்டிடத்தில் நுழைந்த நான் - கண்ட காட்சி...

ஆச்சர்யமான ஆச்சர்யம்...என் நண்பன் கோயிந்து அங்கே புகை பிடித்துக் கொண்டிருக்கிறான்...

அடப்பாவி...எப்போதிலிருந்துடா இந்தப் பழக்கம்...அறையில் நல்லவன் மாதிரி இருந்துவிட்டு, இங்கே வந்துதான் நீ புகைக்கிறாயா...

வேண்டாம் விட்டிருப்பா...உடம்புக்கு கெடுதல் என்று அறிவுரை சொல்லிக் கொண்டே

(அட்ராசக்கை..தம்மு கடன் கேட்க இன்னொரு நாய் மாட்டிக்கிச்சி..காலேஜ்ல அடுத்தவனுக்கு தம் பழக்கத்தை பழக்கி கொடுக்கறது எதுக்கு..இதுக்குத்தான்...)

கோபால் லேபுக்கு இருவரும் விரைந்தோம்...

மனதுக்குள் - திவ்யா...

கண்ணில் - திவ்யா...

கைகளில் - திவ்யா...பால்பாயின்ட் பேனாவால் திவ்யா என்று கிறுக்கி வைத்திருந்தேன் கையில்....

என் மனதை திவ்யா கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்று கொண்டிருந்தாள்..

எதிலும் மனம் செல்லவில்லை..."கோபால் லேப்" கழிந்தது..சனியன் எந்த புரோகிராமுக்கும் அவுட்புட் வரவில்லை...(நமக்கு எப்போ வந்திருக்கு..கம்ப்யூட்டர் ஷட்டவுன் மட்டும்தான் சரியா நடக்கும் நாம கையை வச்சா..)

இயற்பியல் ஆசிரியர் - வகுப்பு மாணவர்களை அழைப்பதாக செய்தி வந்தது...

கல்லூரி வகுப்பறைக்கு எல்லோரும் செல்லுமாறு சொல்லி இருந்தார்...

பாடங்களை முடித்து விட்டிருந்தார்...

விரைவில் வரப்போகும் பிஸிக்ஸ் பிராக்டிக்கல் எக்ஸாம் பற்றி சொல்வதாக சொல்லி வரச் சொல்லி இருந்தார் என்று குள்ள கண்ணன் ஊகம் படித்தான்..

அவர் எனக்கு மிக அறிமுகமானவர்...வகுப்பில் நான் இல்லை என்றால் கண்டிப்பாக தேடுவார்...ஆனால் அதற்குள் திவ்யாவிற்கு பள்ளி முடிந்து விடும்...பள்ளி வாசல் அருகே வைத்து அவளை சந்திக்க முடியாது...

பல்லைக் கடித்துக் கொண்டு வகுப்புக்குச் சென்றேன்...

ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி...ஆசிரியர் - பேச் ஒன்று மாணவர்களை இயற்பியல் ஆய்வகத்துக்கு (Physics Lab) அழைப்பதாக செய்தி அனுப்பினார்...

ஆகா...இறைவனுக்கு நன்றி என்று மனதுக்குள் மத்தாப்பு வெடித்தது...காரணம், நான் இரண்டாவது பேச் ( Batch) மாணவன்...குமார் என்று பெயர்வைத்த பேரண்ட்ஸ் வாழ்க..பின்ன..அறிவானந்தம், அறிவழகன், அடுப்பு வாயன் எல்லாம் 'A' வில் ஆரம்பிக்கும்..எப்போ பார்த்தாலும் பலியாடு மாதிரி நிக்கனும்..(பேருவைக்கும் போது பார்த்து வைங்கடா அப்பனுங்களா...)

துள்ளி எழுந்தேன்...

பள்ளி நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தேன்...

பத்து நிமிடம் லேட்...இப்போது பள்ளி முடிந்து எல்லோரும் போயிருப்பாங்க... கண்களில் கண்ணீர் முட்டியது....துக்கம் தொண்டையை அடைக்குது....

பள்ளியை நெருங்க நெருங்க - பள்ளி விட்டு அனைவரும் போய்விட்டது தெரிந்தது...

நடை தளர்ந்தது...

மெல்ல நடந்து கொண்டிருந்தேன்...

பின்னால் இருந்து ஒரு சப்தம்....சீக்கிரம் வாடி, எங்க வீட்டில தேடுவாங்க... நான் ஸ்கூல் பேகை வைத்து விட்டு எங்க தோட்டத்துக்கு போக வேணும் என்று ஓட்டமும் நடையுமாக ஒரு சின்னப் பெண் என்னை கடந்து சென்றாள்...அது என்னோட செல்ல மான்குட்டி அப்படீன்னு சொல்லித்தான் தெரியவேண்டுமா...

என்னிடம் பேசவில்லை...ஆனால் அந்த டிச்சி மூஞ்சு தோழிக்கு தெரியாமல் எனக்கு இரண்டு செய்திகள்...(எப்படித்தான் இப்படி அட்டுகளா பார்த்து பிரண்டு பிடிக்கறாளுங்களோ)

செய்தி 1 : நான் உடனே தோட்டத்துக்கு போகிறேன்..(சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலம்.. கத்தரிக்காய் / கீரை வகைகள் / எலுமிச்சை ஆகியவற்றை பயிர் செய்து கொண்டு இருந்தார் அவள் அப்பா, ஊருக்குள்ள "கத்தரிக்கா" பேமிலி என்று பெயர்..அது என்னமோ பெரிய வேல்ஸ் இளவரசர் பேமிலி மாதிரி சுத்திவருவான் என்னவளோட இத்துப்போன அண்ணன்..)

செய்தி 2: நீயூம் வா...

ஆக அந்த தோழிக்கு தெரியாமல் செய்தி என்னை வந்து அடைந்தது...

என் நடையின் வேகம் அதிகரித்தது...

விரைவாக வீட்டுக்கு சென்று, குளித்து, நல்ல டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு (துவைக்கவில்லை..ஆனா அவ்ளோ அழுக்கு இல்லை..)

படபடப்பாக கிளம்பினேன்...

அந்த நேரம் பார்த்து - கோவிந்து கல்லூரியில் இருந்து வந்தான்...

எங்கேடா போற குமார் ?

வெளியே..இது நான்...

வெளியேன்னா ?

வெளியேன்னா வெளியேதான்...

ஏண்டா இப்படி எரிந்து விழுகிறாய்...என்னமோ சந்திர மண்டலத்துக்கு போகிற மாதிரி....

அதானே...ஏன் நான் எரிந்து விழுகிறேன்.....என்று மனதுக்குள் நினைத்தபடி...

சாரிடா சனியனே...நான் வந்து சொல்லுறேன்...என்றேன்..

கொஞ்ச நாளா நீ சரியில்லடீ....இரு கவனிச்சுக்கிறேன்...இது கோவிந்து...

அட ஒன்னுமில்லைடா.....என்றபடி - அறையை விட்டு வெளியேறினேன்..

திவ்யா வீட்டு தோட்டம் சமீபித்தது...இருபுறமும் மரங்கள் அடர்ந்த சாலை...எந்த பரபரப்பும் இன்றி சோம்பல் முறித்துக்கொண்டிந்தது மாலைச்சூரியன்...

இன்று என் வாழ்வில் - ஒரு முக்கிய நிகழ்ச்சி நடக்கவிருப்பதை அறியாமல்... மெல்ல சமீபித்தேன்....

என் கண்கள் தென்றலை (திவ்யாவை) தேட ஆரம்பித்தன....

Monday, November 06, 2006

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 2

பாகம்1முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியது....விடுதியில் இருந்த மாணவர்கள், விடுதியின் சட்ட திட்டங்கள் பிடிக்காமல் வெளியேறி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கும் முயற்ச்சியில்...

நான், கோவிந்து, கார்த்திக், மணி, மற்றும் இளமாறன் ஆகிய ஐந்து பேரும் ஒன்றாக தங்கிக்கொள்ளலாம் என்று பிரியப்பட்டோம்...

வீடு தேடும் பொறுப்பு என்னுடையது....

தெரிந்த டீக்கடைக்கு சென்றேன்...இளங்கோ அண்ணா தான் இதற்க்கு ஓனர்..எங்க க்ரூப் கிட்ட ரொம்ப பாசமா இருப்பார்..நாங்களும் அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் விளையாடுவோம்...

நான்: என்ன இளங்கோ அண்னே...ஒரு ஸ்ட்ராங் டீயப்போடுறது...

இளங்கோ: என்ன குமாரு...கொஞ்சம் பழைய பாக்கிய வைக்கிறது..

நான்: என்னன்னே...இப்படி கேட்டா எப்படி...

இளங்கோ : வேற எப்படி ராசா கேக்குறது..

நான்: அட இருங்கன்னே...இந்த மாசத்தில இருந்து தனியா வீடு பாத்து தங்க போறோம்...செலவு கம்மியா ஆகும்..பழைய பாக்கி எல்லாம் கொடுத்துடுறோம்...

அண்ணன் ஒரு முறைப்பு லுக்கு கொடுக்கிறார்...

மீண்டும் நான்..அண்னே...தம்முக்கு ஒரு ரெண்டு ரூபா தாங்கன்னே...

இளங்கோ அண்ணன்:ரொம்பத்தான் ஏத்தமாகிப்போச்சி டா உங்களுக்கு...(சட்டை பையிலிருந்து காசை கொடுக்கிறார்..)

நான்: அண்ணே...பசங்க வீடு பாக்கிற வேலையை என்கிட்ட கொடுத்திட்டாங்க...ஏதாவது வீடு ஊருக்குள்ள இருக்கா சொல்லுங்க..

இளங்கோ அண்ணன்: அந்த உரக்கடைக்கு பக்கத்துவீடு காலியாத்தாண்டா இருக்கு...சீக்கிரம் போ...இளங்கோ சொல்லிவிட்டேன் அப்படின்னு சொல்லு...

வேகமாக தலையாட்டிவிட்டு உரக்கடை நோக்கி சென்றேன்...

உரக்கடை பூட்டி இருந்தது....மதிய உணவுக்காக சென்று இருப்பர் போலும்..

பக்கத்துவீடு திறந்து இருந்தது...மெல்ல தட்டினேன்....

டக் டக்...யாருங்க வீட்டுல...

யாரோ நடந்துவரும் சரசர ஒலி....

க்ரீச்....

கதவு திறந்தது....

மின்னல் வெட்டியது போல வந்து நின்றாள் என் தேவதை...

அவள் : என்ன வேனும்....

அவளை நேருக்கு நேர் பார்க்க தைரியம் இல்லை...

தலையை குனிந்தேன்...வீடு பாக்கலாமேன்னு...

அவள் : எந்த வீடு...

குனிந்த தலை நிமிராமல்...உரக்கடைக்கு பக்கத்துவீடு...இளங்கோ அண்ணா சொல்லிவிட்டார்...

அவள் : ஹல்லோ....வீடு பாக்கத்தானே வந்தீங்க...பொண்ணு பார்க்க இல்லையே...எதுக்கு இவ்ளோ வெக்கப்படுறீங்க...

அவமான உணர்ச்சி தலைதூக்க...சட்டென நிமிர்ந்து அவளை பார்த்தேன்...

அப்பா...அந்த கண்களில்தான் என்ன மின்னல்....என்ன தீட்சண்யம்...

என் தேவதை பேசும் என்பதே எனக்கு கனவு போல் இருந்தது....அதுவும் பட் பட் என பட்டாசாய் வெடிப்பாள் என்பது ஆச்சர்யமான ஆச்சர்யம் எனக்கு...

ஏற்க்கனவே உங்க பிரண்டு கோயிந்தன் என்னை ஸ்கூல் கிட்ட பார்த்து கேட்டார்...எங்க அப்பா கிட்ட சொல்லி உரக்கடைக்காரர் கிட்ட ஏற்க்கனவே சொல்லியாச்சி...

இனிமே குட்டிசுவர் மேல உட்காராமல் மாடியில் இருந்தே நீங்க என்னை சைட் அடிக்கலாம்....

ஹய்யோ...என் இதயம் வாய்வழியாக துள்ளி வெளியே வரும்போல இருந்தது...நாம சைட் அடிக்கற விஷயம் இவளுக்கு தெரிந்திருக்கு....அதுக்குமேல...இந்த கோயிந்தன்....இவளோட பேசின விஷயத்தை நம்ம கிட்ட சொல்லாம விட்டுட்டானே...பனியன் போட்ட சனியன்..அவன....

ஹி ஹி...அப்படி எல்லாம் இல்லை....ஹி ஹி...

அவள் :ரொம்ப வழியாதீங்க....உங்க அறையில நீங்க கவிதை எல்லாம் எழுதிக்கிட்டு இருக்க விஷயம் எல்லாம் கோவிந்தன் சொன்னார்...எனக்கு எப்போவே தெரியும்...நீங்க பண்ணிக்கிட்டு இருக்கறது எல்லாம்....பொண்னுங்க என்ன எதுவும் தெரியாதவங்கன்னு நினைச்சிட்டீங்களா...

வெட்கம் பிடுங்கி தின்றது எனக்கு....

ஹி ஹி...அப்படி எல்லாம் இல்லை....ஹி ஹி...

போதும்...எங்க அப்பா வர நேரம் ஆச்சு....நாளைக்கி மெஸ் பக்கத்தில வாங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்....

வந்திடுரேன் திவ்யா...

முதல் முதலில் அவள் பெயரை அவளிடமே உச்சரிக்கையில்....நான் இந்த உலகத்திலேயே இல்லை...

அங்கிருந்து எப்போது வந்தேன்...எப்படி வந்தேன்...என்பதே தெரியவில்லை....அறையில் படுத்திருந்தேன்.......

மெஸ் என்பது கொஞ்சம் ஒதுக்கு புறமாக உள்ள இடம்...ஒரு ஓட்டல்காரர் கல்லூரி மாணவர்கள் சாப்பிடுவதற்க்காக அமைத்து இருந்தார்...

நிமிடங்கள் யுகங்களாக கழிந்தன....

அடுத்த நாள்....( தொடரும்....)

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 7

பாகம்1
பாகம்2
பாகம்3
பாகம்4
பாகம்5
பாகம்6

அவள் கைகளை கெட்டியாக பற்றிக் கொண்டு...காட்டை நோக்கி பார்த்தேன்..

தொலைவில்..நரி ஒன்று...ஊஊஊஊஊஊஊ என்று ஊளையிட்டு அமைதியை கிழித்தது....

திவ்யா..இப்போ என்ன செய்வது....

மனம் செய்வதறியாது துடித்தது.....

அவள் மென்மையாக என்னை பார்த்தாள்...பொறுங்க குமார்...என்றாள்...

அவள் மனதில் இவ்வளவு தைரியமா....எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்...

சின்னப்பெண்...அவளுக்கே இவ்வளவு தைரியம் இருக்கும்போது நமக்கென்ன..

என் மனதில் எப்படித்தான் அந்த உத்வேகம் வந்ததோ தெரியவில்லை...

திவ்யா..வா என்னோடு என்று...அவள் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தேன்...

காட்டுக்கு உள்ளே செல்லாமல் காட்டை ஒட்டியே நடந்தால் - பாதையில் கொஞ்சம் முட்கள் இருந்தாலும் - ஐந்து நிமிட நடையில் அடுத்த தோட்டத்துக்கு சென்று விடலாம்...பிறகு அங்கிருந்து - ஓடை வழியாக இறங்கி நடந்தால் - மாரியம்மன் கோவில் செல்லும் பாதை வந்துவிடும்...

அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் திவ்யாவின் கல்லூரி தோழி மோகனாவின் வீடு..

அங்கே சென்று மோகனா வீட்டில் திவ்யாவை விட்டுவிட்டால், திவ்யா தோழி வீட்டுக்கு வந்தது போல் இருக்கும்..பிறகு மோகனாவே திவ்யாவை அவள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவாள்...

இதுதான் என் மனதில் தோன்றிய எண்ணம்...திவ்யாவிடம் சொன்னேன்...சிரித்துக்கொண்டே ஆமோதித்தாள்...படபடவென செயல்படுத்தினேன்...

பக்கத்து தோட்டம் வந்தது...அங்கிருந்து ஓடைக்கு செல்லவேண்டும்...விரைந்து நடந்தோம்...ஓடையில் சிறிய அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால் கடப்பது சுலபமாகவே இருக்கும் என்று நம்பினேன்..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஆ..ஆ...ஆ..ஆ...என்று வலி மிகுந்த முனகலை திவ்யா வெளிப்படுத்தினாள்...

என்ன என்ன என்ன என்று கேட்டேன்...

காலை காட்டினாள்...

குனிந்து அமர்ந்து பார்த்தேன்...

நல்ல கருவேல முள் ஒன்று என் அன்பிற்க்கு இனியவளின் காலை பதம் பார்த்திருந்தது...

மெல்ல பிடுங்கி எடுத்தேன்...

வலியை தாங்கிக்கொண்டாள் போல..அவள் தங்க முகம் அதை பிரதிபலித்தது....

குமார்...இனிமே என்னால நடக்க முடியாது..பயங்கரமா வலிக்குது என்றாள்...

கண்ணு...ஓடையை மட்டும் கடந்திடலாம்....பிறகு நல்ல பாதை இருக்கு...ஐந்து நிமிட நடையில் மோகனா வீட்டுக்கு போயிடலாம்...என்றேன்...

ம்ம்ம்ம்ம்ஹும்ம்....என்னை தூக்கிட்டு போ...ஓடையில் முள் இருக்கும்...ஓடையை தாண்டி விட்டுவிடு...பிறகு நடக்கிறேன்....என்றாள்...

என்ன, உன்னை தூக்கவா...முடியாது....நடந்து வா....என்றேன்..

ம்ம்ம்ஹூம்...ஓடையை தாண்டி விட்டுவிடு...பிறகு நடந்து வருகிறேன்...என்று அடம் பிடித்தாள்...

சரி நீங்க சொல்லிவிட்ட பிறகு அப்பீல் ஏது....என்று...அலாக் அலேக்...என்று ஒரே தூக்கு...

பிறகு ஓடையில் இறங்கி நடந்தேன்...

சலசலத்து ஓடும் ஓடை நீர்....மேகங்களுக்கு இடையே மெல்ல எட்டிப்பார்க்கும் தங்க நிலா...என் கரங்களில் 50 கிலோ தாஜ்மாஹால் போல் - என் காதலி...என்னவள்..என் பொன்நிலா..

வான் நிலா, நிலா அல்ல, என் வாழ்வினில் நிலா என்று பாடவேண்டும் போலிருந்தது..அது சினிமா பாட்டாச்சே...

இப்படி செய்தால் என்ன...

ஒரு காடு...ஒரு ஓடை..ஒரு நிலா...என் கையில் என் காதலி....

அட இந்த தலைப்பில் கவிதை எழுதி நம் கவிதை பிரசவத்தை தொடங்க வேண்டியது தான் என்று நினைக்கையில்.....

குமார்...ஏதாவது பாட்டு பாடுங்க என்றாள்...

என்ன...பாட்டா...எவ்வளவு பிரச்சினையில் போய்க்கிட்டு இருக்கோம்...இன்னும் பாட்டு கேட்குதா உனக்கு என்றேன்..

இல்லை, நீங்க பாடத்தான் வேண்டும்..இல்லை என்றால் நான் வர மாட்டேன்...என்றாள்..

சரி, உன் பிடிவாதம் தான் எனக்கு தெரியுமே என்று மனதிற்க்குள் நினைத்தபடி...

'ரட்சகன்' சினிமா பாட்டு பாடவா...என்றேன்...

ஓ..ஓ...என்றாள்..

ம்ம்ம்..மகாராணியார் சித்தம் என் பாக்கியம் என்றேன்...

அவள் செல்லமாக சினுங்க,

நான் ஆரம்பித்தேன்..

"கையில் ஏந்திய கனவா நீ...
கைகால் முளைத்த காற்றா நீ...
கையில் ஏந்தியும் கணக்க வில்லையே...
நிலவால் செய்த சிலையா....நீநீநீ..."

என்று பாடினேன்...கண்மூடி ரசித்தாள்...

ஓடையை கடந்தேன்...ம்ம்ம்...இறங்கு என்றேன்...

ஜிங்...என்று கீழே கொலுசு சப்தம் கேட்க குதித்து...பட பட என்று நடக்க ஆரம்பித்தாள்...

வாங்க சீக்கிரம் மோகனா வீட்டுக்கு போவோம்...என்றாள்...

ஏய்..."நடக்க முடியவில்லை தூக்கு என்றது....

அது சும்ம்ம்ம்ம்மா....என்றாள்...

அடிப்பாவி....என்றேன்...

சரி நீங்க இப்படியே உங்க வீட்டுக்கு போங்க...நான் மோகனா வீட்டுக்கு போய்விடுகிறேன்...என்றாள்...

பார்த்து போடா செல்லம்...என்று விடை கொடுத்தேன்...

சிரித்து செல்லும் தென்றல் போல சிட்டாக பறந்தோடி போனாள்....

என் உள்ளம் வானில் பட்டாம்பூச்சியாய் பறந்தது...

இந்த சிரிப்பெல்லாம் இன்னும் சிலநாளில் வடியப்போகிறது என்பது தெரிந்தால்.....என் உள்ளத்து பட்டாம்பூச்சி சிறகொடிந்து போயிருக்குமோ..................

..காதல் பயணம் தொடரும்..

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 4

பாகம்1 பாகம்2 பாகம்3
திவ்யா வீட்டிலிருந்து என் வீட்டுக்கு 5 நிமிட நடை...ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தேன்...

அதிகாலை குளிரிலும் வியர்க்க ஆரம்பித்திருந்தது...

புஸ்...புஸ்...என்று மூச்சு வாங்கியது...

வந்து பரபரவென உள்ளே நுழைந்தேன்...

இளமாறன் காலை ஒரு மிதி...ஆ ஆ ஆ என்றான்...

கோவிந்தன் கையை ஒரு இடறு...டேடேய்ய்ய்ய்ய்....என்று அலறினான்....

ஒருவழியாக படுக்கையை வந்து அடைந்தேன்...காலையில் திவ்யாவை சந்திக்கப் போகிறேன் என்ற நினைவு உள்ளமெல்லாம் நிறைய, தூக்கம் கண்களை இழுத்துச் சென்றது....எப்போது தூங்கினேன் என்று தெரியாது...

உலுக்கி எழுப்பினான் கார்த்தி...டேய் குமார்...டேய்.....எந்திரிடா...இன்னைக்கு உன்னோட முறை....எழுந்து தண்ணி பிடி, தொட்டியை நிரப்பு....டேய்....

எங்கள் அறையில் உள்ள ஐந்து பேரும் ஒவ்வொரு நாளைக்கு தெரு பைப்பில் தண்ணீர் பிடித்து வீட்டில் உள்ள பெரிய குளியல் தொட்டியை நிரப்புவது வழக்கம்....

ப்ளீஸ்டா காட்டு கார்த்தி செல்லம்...இன்னைக்கு ஒரு நாளைக்கு எனக்கு பதிலா நீ பிடிடா...கண்ணையே திறக்க முடியல டா செல்லம்....ப்ளீஸ்...கெஞ்சினேன்...

கார்த்தி என்பது அவரின் இயற்ப்பெயர், காட்டுக்கார்த்தி என்பது நாங்கள் வழங்கிய காரணப்பெயர்..காட்டான் என்று அழைக்கப்படும் கார்த்தி, பார்ப்பதற்க்கு செங்கல் சூளையில் பணிபுரிபவன் மாதிரி இருந்தாலும் வெள்ளை மனசுக்காரன்...

ஒழிஞ்சு போ சனியனே...பிடிச்சு தொலையறேன்....காலேஜுக்காவது வரியா இல்லையா....இன்னைக்கு கோபால் லேப் ( cobol lab)...

இல்லை கார்த்தி...ஒரு வேலை இருக்கு...மெஸ் வரைக்கும் போகனும்...

அட பன்னி....தினமும் மெஸ்ஸுக்குதாண்டா திங்க போய்க்கிட்டிருக்கோம்... என்னா வேலை சொல்லு....சொல்லு.....மேட்டரை சொல்லுடா...டேய்...குமார்....

நான் ஏதாவது உருப்படியா செய்துடுவேனோ என்றுதான் பயலுக்கு டென்ஷன்...

கொஞ்சம் தொல்லை செய்யாம அந்த பக்கம் போறியா..நைட்டு தூக்கமே இல்லை...

டேய்...இன்னும் நான் உனக்கு தண்ணி புடிக்கலை...உனக்கு தண்ணி புடிச்சு வைக்கறேன்னு சொன்னேன் பாரு...என் புத்திய செப்பல் த மாறுதலங்கா...(செருப்பாலே அடிச்சிக்கனும் என்பதின் இந்தி)..இவருக்கு என்னமோ சல்மான் கானுன்னு நெனப்பு...இந்தியில திட்டுது பாரு எடுபட்டது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே மரம் மாதிரி கிடந்தேன்..

நாய்,உருப்புடியா ஏதும் செய்யறதில்ல...என்று புலம்பிக் கொண்டே காட்டு கார்த்தி குடங்களோடு வெளியேறுகிறான்...

மீண்டும் கனவில் ஆழ்கிறேன்...எப்போது தூங்கினேனோ தெரியாது...மீண்டும் விழிப்பு வந்தது - மணி பார்த்தேன்...காலை 10:00....

அய்யோ நம் செல்லக்குட்டி எட்டு மணிக்கு வந்து வெயிட் பன்றேன்னு சொன்னாளே ? நாம இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கோமே...

அவசரம் அவசரமாக காலைக் கடன்களை முடித்து விட்டுக் கிளம்பினேன்....

ஓட்டமும் நடையுமாக மெஸ் இருக்குமிடம் அடைந்தேன்...

அங்கே ஒரு சிறிய திண்ணை போன்ற அமைப்பு இருந்தது...அங்கே என் தேவதை...சின்னப் பெண்....முழுமதி...பெண் மான்...தங்கச் சுரங்கம்.... கொஞ்சும் அருவி...என் உயிர்....

அமர்ந்திருந்தாள்....

பச்சை பாவாடை தாவணி...முன்னால் இழுத்து விட்ட இரட்டை சடை... கண்ணாடி வளையல்கள்....நெற்றியில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவில் சின்னப் பொட்டு....கைகளில் இரு புத்தகம்....அருகில் அவளது ஸ்கூல் பேக்...

ஸாரி திவ்யா - லேட்டாகிடுச்சி...அயம் வெரி சாரி....

கீழே குனிந்து கையில் இருந்த ஒரு சின்னக் குச்சியால் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து ஒரு மின்னல் பார்வை பார்த்தாள்..

லாரிக் கடியில் வைத்து நசுக்கிய எலுமிச்சை பழம் மாதிரி - சிதறியது என் மனம்...

என்ன சக்தி இந்த கண்களில்...சுட்டெரிப்பதுபோல் பார்த்தாள்....

நான் உடைந்த பார்வையில் அவள் முன்...என்ன சொல்லப்போகிறாளோ என்ற அதிர்ச்சியில் உறைந்து போனேன்...

பட்டெனச் சிரித்தாள்...கலகலவென...மாதுளையை கையால் உடைத்தால் பட்டென சிதறுமே...இரு கைகளால் முத்துக்களை வாரி எடுத்து பளிங்கு தரையில் வீசினால் சிதறுமே...அதுபோல இருந்தது...

ஹெல்லோ குமார்...நான் சின்னப் பொண்ணு...எனக்கு எதுக்கு இப்படி பயப்படுறீங்க..இத்தனைக்கும் நான் ஸ்கூல் - நீங்க காலேஜ்....

ஹி ஹி...வழிந்தேன்....

சிகரெட் பிடிப்பீங்களா ?

பக்கென்று இருந்தது....ஹய்யோ இவ எப்போ பார்த்தா...இவள் வரும்போது தான் பிடிக்கறதில்லையே...என்று நினைத்தபடி...

எப்பவுமே இல்லை திவ்யா...எப்பவாவது...

ஏன் சிஸர் பில்டர் பிடிக்கிறீங்க - கிங்ஸ் வாங்கிக்கிங்க...சிஸர் பில்டர் பிடிச்சி இருமிக்கிட்டு இருக்கிறீங்களாமே ரூம்ல...கோவிந்தன் அண்ணா சொன்னார்...

ஆமாம், காசு இருந்தா கிங்ஸ் என்ன 555 கூட அடிப்பேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு..( சிசர் பில்டர் 10 சிகரெட் உள்ள பாக்கெட் 3 ரூபாய்..எக்ஸாம் டைம்ல கைகொடுக்கும் கை..)

இல்லை ஆக்சுவலி எனக்கு கிங்ஸ் பிடிச்சா தான் இருமல் வருது...நான் இப்போ எல்லாம் ரொம்ப குறைச்சிட்டேன்...ஒரு நாளைக்கு ஒன்னே அதிகம்...(அதுதான் கிடைக்குது..)..போகப்போக குறைச்சிடுறேன்மா...

டேய்...கோவிந்தா...வைச்சிக்கறண்டா நாயே உன்னை....என்று மனதுக்குள் எண்ணியபடி...மீண்டும் வழிந்தேன்....

கொஞ்சம் தைரியம் வந்து விட்டது எனக்கு....திவ்யா - ராத்திரி பூரா எழுதியாவது லெட்டரை முடிச்சியா இல்லையா...

அட என்ன இது...என்னவளுக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாது என்று நினைத்திருந்தேன்....பட்டென தலை குனிந்தாள்...மெல்ல சிரித்தாள்...அவள் கன்னங்கள் - சேலத்து மாம்பழம் போல சிவந்தன...

அப்படியே கிள்ளலாம் போல எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டு....
எங்கே அந்த லெட்டர் என்று கேட்டேன்..

மெல்ல புத்தகத்தை விரித்து எடுத்தாள்...

அட இதென்ன...கடிதம் என்றால் ஒரு புத்தகமே போடலாம் என்பதுபோல 10 பேப்பர்களை கொடுத்தாள்...

பட்டென வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்தேன்...அவள் கரங்கள் முதல் முதலாக என் கையில் பட்டது...இதென்ன...இவள் கையை வாழைத்தண்டு போல படைத்து விட்டானா பிரம்மன்...அவ்வளவு வழவழப்பான கை....இவுங்க அப்பன் காய்கறிகடைகாரன் கூறுபோட்டு வித்துடப்போறான்...

எழுந்து கொண்டாள் பட்டென....எங்க ஸ்கூல்ல தேடுவாங்க...அடுத்த பீரியட் மேக்ஸ் ( maths) அவர் எங்கப்பாவுக்கு தெரிஞ்சவர்...நான் போயாகனும்.... என்று படபடவென கிளம்பி விட்டாள்....

சற்றுத் தூரம் சென்று பட்டென மின்னல் வெட்டியது மாதிரி திரும்பி பார்த்தாள்..நான் அவளையே - அவள் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்...அவள் திரும்பியபோது மீண்டும் எங்கள் கண்கள்
சந்தித்துக் கொண்டன...

ஏய்...மறுபடி எப்போ பார்க்கலாம்...சத்தமாக கத்தினேன்...கொஞ்சம் அதிகமாக கத்துகிறோனோ என்று கூடத் தோன்றியது....

உதட்டை குவித்து விரல் வைத்தாள்...

உஸ்ஸ்ஸ்ஸ்....சத்தம் கூடாது....

படிச்சு பாருங்க...தெரியும்...என்று மெல்ல எனக்கு மட்டும் கேட்பது போல சொல்லிவிட்டு தெரு திருப்பத்தில் மின்னலாக மறைந்து விட்டாள்...

அவள் போகும் திசையையே சில நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தவன், சுய உணர்வு வந்தவனாக திரும்பி நடந்தேன்...

கோபால் லேபு வேறு உள்ளது, கல்லூரிக்குப் போகலாமா, அல்லது வீட்டுக்கு போய் லெட்டரை படித்துவிட்டு நித்திரையில் ஆழலாமா என்ற கேள்விக்கு கல்லூரிக்கு போகலாம் என்று மனம் முடிவெடுத்தது....

இதே முன்பு கல்லூரி லேபை கட்டடித்துவிட்டு உறக்கத்தில் ஆழுவது வழக்கமாக இருந்தது...சிரித்துக் கொண்டேன்...இந்த காதல் செய்யும் மாயம்தான் என்ன ?

அந்த கடிதத்தில் என்ன இருக்கும் என்று எண்ணியவாறு, உடனே படிப்பது என்று முடிவு செய்து சற்று ஒதுக்கு புறமான இடம் செல்ல தீர்மானித்தேன்... கல்லூரி செல்லும் வழியில் இருந்த கைவிடப்பட்ட பழைய பள்ளி கட்டிடத்தினுள் நுழைந்தேன்....

அங்குதான்....

...காதல் பயணம் தொடரும்.........

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 3

பாகம்1 பாகம்2
புரண்டு புரண்டு படுத்தேன்...தூக்கம் என்பது சிறிதும் இல்லை...ஏதேதோ எண்ணங்கள் வந்து அலைகழித்தன...

இந்த காதலை என்னவென்று சொல்வது....இதில் விழுந்துவிட்டால் உலகம் உறைந்துவிடுகிறதே...

எப்படா விடியும் என்று இருந்தது......அறை நன்பர்களை படுத்தி எடுத்துவிட்டேன்....

மூன்று வாரம் முன்பு வந்த குமுதம் வார இதழை பத்தாவது முறையாக படிக்க ஆரம்பித்தேன்...லைட்டை நிறுத்தி தொலைடா சனியனே... - இது கார்த்தி....டேய்....எங்க இருந்துடா வந்து தொலைஞ்ச நீ - இது கோயிந்து... டேய்...ஒவர் சீன் உடம்பு தாங்காதுடா - போதும்...இத்தோட நிறுத்திக்க...இது மணிவண்ணன்....

உன் டார்ச்சருக்கு அளவே இல்லையாடா என்று இளமாறன் கடைசியாக அலறும் போது மணி காலை 4:00 - நான் காலை தூக்கி இளமாறன் மீது போட்டதோடு நிறுத்தி இருக்கவேண்டும்....சும்மா ஆட்டிக்கிட்டே இருந்தால்....

அறையைவிட்டு வெளியே வந்தேன்...இரவு ஆரம்பமாகும்போது ஒரு பாக்கெட் ஆக இருந்த சிகரெட்டுகள் - தீர்ந்து ஒன்றாக மாறும்போது - ஒரு பாதி சிகரெட்டை அனைத்து வைத்திருந்தேன்...அதை எடுத்து - சிறிது நாற்றமெடுத்தது - பற்றவைத்தேன்...

என்னவளும் இப்படி கஷ்டப்படுவாளா...அவளுக்கு தூக்கம் வந்திருக்குமா...என்று மனதில் நினைத்தபோது....ஏன் அவள் வீட்டு பக்கம் போக கூடாது என்று தோன்றியது....

சட்டை அணியவேண்டும் என்று கூட தோன்றவில்லை - அப்படியே வெறும் உடம்போடு - கிளம்பினேன்...

தெரு நாய்கள் சன்னமாக குரைக்கும் ஓசை தொலைவில் கேட்டது...

ஊஊஊஊஊஊஊ - எங்கோ ஒரு சிறு நரி ஊளையிடும் சப்தம் வேறு...

இந்தமாதிரி விடிந்தும் விடியாத குளிர் இரவு நேரங்களில் - திருட்டு தொழில் செய்பவன் கூட வெளியே வரமாட்டான் என்று எண்ணமிட்டபடி....

அவளது வீட்டருகில் நான்....

இதயம் படக் படக் என்று அடித்துக்கொண்டது....இதயம் துடிக்கும் சத்தம் என் காதில் கேட்டது....

அவள் வீடு ரோடு ஓரத்தில் அமைந்திருந்தது...வாசல் இடது புறம்....முன்பாக சிறு முற்றம்...ஒரு தின்னை...அங்கே வாசலுக்கு முன்பாக ஒரு சிறிய ஸ்டோர் ரூம்...அதன் சன்னல் ரோட்டை பார்த்த மாதிரி இருந்தது....

நான் சென்றபோது ஒரு சிறு விளக்கு எரிந்துகொண்டிருந்தது அந்த சிறிய அறையில்.....

சன்னல் சிறிது திறந்த நிலையில் இருந்தது...ரோட்டின் ஓரத்தில் இருந்ததால் மெல்ல பார்வையை உள்ளே செலுத்தினேன்....

ஆ...இதென்ன...என்னவள் உள்ளே அமர்ந்திருக்கிறாள்...ஒரு சிறிய மேசை...அதன் எதிரே ஒரு சிறிய மர நாற்க்காலி...அதில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டு இருக்கிறாள்...

மெதுவாக சன்னலை திறந்து பார்த்தேன்...

சீரியசாக சில வினாடிகள் சிந்திக்கிறாள்...பிறது இரண்டு வரி எழுதுகிறாள்...அப்படியே மேசைமீது சாய்ந்து இரண்டு நிமிட தூக்கம்...மீண்டும் எழுகிறாள்...இரட்டை சடையை முன்னால் தள்ளிவிட்டு மீண்டும் எழுதுகிறாள்...

எப்படியும் அந்த கடிதம் எனக்குதான் எழுதுகிறாள் என்று தெரியும்.....

திடீர் திருப்பமாக வாசல் கதவு திறக்கும் ஓசை...

க்ரீச்....

கீல் விட்டுப்போன பழைய கதவுகூட காதலுக்கு உதவி செய்யும்போல..பட்டென குனிந்துகொள்கிறேன்...காரணம் வாசலில் இருந்து பார்த்தால் நான் நிற்க்கும் இடம் தெருவிளக்கு ஒளியில் தெளிவாக தெரியும்...

திவ்யாவின் அப்பா....

என்னம்மா - புக்கை வச்சிட்டு தூங்க கூடாது...இன்னும் அங்கிட்டு என்ன செய்யுற.... ( திருச்சி பாஷை)

இந்தா வந்திடேன்ப்பா...அடுத்த வாரம் பரீட்சை...அதுதான்...

ஹி ஹி...அட...பரீட்சைக்கு நம்ம ஆளு எப்படி லட்டெர் எல்லாம் எழுதி அருமையா பிரிப்பேர் செய்யுறா என்று மனதுக்குள் சிரித்தபடி....

சுவர் ஓரமாக - நிழலில் நடந்து வீடு வந்து சேர்கிறேன்...

எனக்கு தெரியாது அப்போது...என்னவள் உயிரை உருக்கி எழுதிய கடிதங்கள் எல்லாம் தீயின் கொடு நாக்குக்கு இரையாகப்போகிறது என்று...

----காதல் பயணம் தொடரும் ----

ஆதலினால் காதல் செய்தேன்..பாகம் 1

என் பெயர் குமார்..என் காதல் கதையை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன்...என் பள்ளிப் படிப்பு முடிந்தது...கல்லூரிக்கான தேடல் ஆரம்பமாயிற்று...என் மதிப்பெண் அவ்வளவு அதிகமில்லை...சராசரி தான்...இடம் கிடைத்தது திருச்சிக்கருகில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி...

கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிப் பருவத்தில் கல்லூரியைப் பற்றி பல கனவுகள் கண்டிருந்தேன்...அவை யாவும் நிறைவேறப்போகும் ஆவலில் நெஞ்சம் நிறைந்த படபடப்புடன் முதல் நாள் கல்லூரி விடுதியில்....

நண்பர் அறிமுகம் எல்லாம் முடிந்தது...பல ஊர்களில் இருந்து இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து மாணவர்கள் வந்திருந்தார்கள்...

கல்லூரி வகுப்புகள் ஆரம்பமாயின...அனைத்து சுகந்திரங்களும் ஒருசேர கைகளில்...

நினைத்த நேரம் சினிமா...அவ்வப்போது வகுப்பு...பல சிறகுகள் முளைத்தது போல் இருந்தது...

எங்கள் கல்லூரியில் இருந்து விடுதி அரை கிலோமீட்டர் தூரம் அமைந்திருந்தது...நடந்துதான் செல்ல வேண்டும்...

கல்லூரிக்கு அருகில் ஒரு பள்ளியும் அமைந்திருந்தது....முற்றிலும் மாணவிகள் படிக்கக் கூடிய பள்ளி....

மாலை கல்லூரி முடிந்ததும் அந்த பள்ளிக்கருகில் இருந்த ஒரு குட்டிச்சுவர் தான் மிக உதவியாக இருந்தது...அதில் அமர்ந்து கொண்டு போகும் வரும் இளம் சிட்டுக்களைப் பார்ப்பது....பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் மாணவிகள், வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைகள் போல் தோன்றினார்கள்...

அந்த தேவதைகளில் ஒன்றுதான் என் இதய ராணியாக பின்னாளில் ஆகிய திவ்யா...

ஆடம்பரமான உடை அணிவதில்லை அவள்...சராசரி உயரம்...சொல்லப்போனால் சற்று குள்ளம்...நீள கருங் கூந்தல்...பார்ப்பவரின் இதயத்தினை ஊடுருவும் கண்கள்....குத்தீட்டி போல் அமைந்த புருவம்.....செந்நிற சிறிய உதடுகள்.....

நளினமாக நடக்கும் நடை...பேசுகிறாளா இல்லையா என்பது போல மெல்லிய குரல்...

இது தான் திவ்யா...

நான் பெண்களிடம் அதிகம் பேசுவது கிடையாது...ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்த திவ்யா, பிறகு என் உள்ளத்தினை கொள்ளை கொண்டாள்...

அவளைப் பார்க்காத நாட்கள் , எனக்கு நாட்களாகவே தோன்றவில்லை....அவளை மீண்டும் காணும்வரை, வலி நிறைந்ததாக மாறின...

அவளிடம் நான் முதல் முதலாக பேசும் தருணம் வாய்த்தது...அந்த நாள்....

..காதல் பயணம் தொடரும்..