Thursday, January 17, 2013

B.Sc/BCA/M.Sc/MCA/BE/B.Tech இறுதியாண்டில் செய்யும் ப்ராஜக்ட்



சுற்றிவளைத்து சொல்ல விருப்பமில்லை. எந்த வெகுஜன ஊடகங்களிலும் பார்த்த நினைவில்லை. செமஸ்டர் இறுதியாண்டு ப்ராஜக்ட்டை காசு கொடுத்து வாங்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லத்தான் இந்த பதிவு !!!

பொதுவாக இண்டர்வீயூவில் சந்திக்கும் ப்ரஷ்ஷரிடம் (இளம்பொறியாளர்), அவர் என்ன தெரியும் என்று ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ளாரோ அதை பற்றிய கேள்விகளை (C, Java) கேட்போம். அதன் பிறகு இறுதியாண்டு ப்ராஜக்ட் என்ன செய்துள்ளார் என்பதை பற்றி கேட்போம். அதை அவர் எப்படி விளக்குகிறார் என்பதை உன்னிப்பாக கவனிப்போம். (எக்ஸ்பீரியன்ஸ் மக்களிடம் கடைசியாக பணிபுரியும் / பணியாற்றிய நிறுவனத்தில் என்ன வேலை செய்தார், அதில் அவரது பங்கு என்ன என்று கேட்பது மாதிரி)...

பொதுவாக / என்னுடைய பார்வையில் (அதாவது நான் பார்த்தவரையில்) பே-பே-பே என்று 90 சதவீதம் பிள்ளைகள் உளறல்ஸ் ஆப் இண்டியாவாக திருதிரு என்று விழிக்கும். இது இந்தியா முழுமையிலும் உள்ள நிலை. காரணம் இது தான். ப்ராஜக்ட் செய்யுங்கள் என்று பல்கலைகழகம் அளிக்கும் 6 மாதத்தில் 5 மாதம் ஊர் சுற்றிவிட்டு (கடைசி செமஸ்டரில் தான் ப்ராஜக்ட்டும் வைவாவும் மட்டும் தான் இருக்கும் - மற்ற வாசகர்களுக்காக குறிப்பிடுகிறேன்), கடைசி ஒரு மாதத்தில் இந்த புராஜக்டுகளை விற்பதற்கென்றே உள்ள நிறுவனங்களிடம் சென்று 5 முதல் 10 ஆயிரம் வரை கட்டி (இதுதான் கடைசி செலவு என்று பெற்றோர்களிடம் வாங்குவது) ப்ராஜக்டை முடித்துவிடுவது. இந்த புற்றீசல் நிறுவனங்களும் (எதாவது ஒரு டெக்னாலஜி என்று நிறுவனம் பெயர் முடியும்) பணத்தை வாங்கிக்கொண்டு, இது தான் ப்பா ப்ராஜக்ட் டைட்டில், இது தான் டிஸ்க்ரிப்ஷன் என்று ப்ராஜக்டை கொடுத்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் எக்ஸ்ப்ளைன் செய்வர்கள், லேபை உபயொகப்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள். சில நிறுவனங்கள் புத்தகம் வரை ஸ்பைரல் பைண்டிங் செய்து கொடுத்துவிடுகிறார்கள்...

இதில் கொடுமை என்னவென்றால் HOD க்களும் இதை கண்டும் காணாமல் விட்டுவிடுவது தான். மாணவன் / மாணவி பெப்பெரெப்பே என்று வைவாவில் விழிப்பார்கள். என்னடா ப்ராஜக்ட் என்றால் முழுமையாக சொல்லமாட்டார்கள். மாணவன் / மாணவியின் வாழ்க்கையாயிற்றே ! என்று HOD கள் கொஞ்சம் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். எக்ஸ்டர்னல் வந்தாலும் அவர்களிடமும் கொஞ்சி / கெஞ்சி உங்கள் வாழ்க்கையை HOD காப்பாற்றுவார். (நீங்கள் அவர்களை என்னதான் கிண்டல் அடித்திருந்தாலும்)(இந்த ப்ராஜக்ட் வைவாவில் பெயில் ஆனால் டிகிரி கிடைக்காது).

இது HOD அவர்களின் தவறா ? அல்லது இந்த மாணவர்களின் ப்ராஜக்ட் ஐ மட்டும் நம்பி நிறுவனம் நடத்தும் புற்றீசல் ப்ராஜக்ட் நிறுவனத்தின் தவறா ? உங்கள் கல்லூரிக்கு வந்து உங்களுடைய போலி  / பொய் ப்ராஜக்டில் HOD யின் அன்புக்கும் நட்புக்கும் கட்டுப்பட்டு உங்களை பாஸ் செய்கிறார்களே அந்த எக்ஸ்டேர்னலின் தவறா ? அல்லது உங்களுக்கு இறுதியாண்டு ப்ராஜக்ட் என்பது எப்படியான வாழ்க்கையை கொடுக்கும் என்று கற்பிக்க தவறிய ட்ரெயிங் டைரக்டரின் தவறா ? அல்லது உங்களுக்கு புராஜக்ட்டை நிறுவனத்தில் வாங்கி தரதவறிய ப்ளேஸ்மெண்ட் டைரக்டரின் தவறா ?

இது அனைத்துக்கும் பதில் 'இல்லை' என்பதே !!!

அவர்கள் குதிரையை தண்ணீர் தொட்டிவரை கொண்டு சென்றுவிட்டார்கள். தண்ணீர் குதிரை தான் குடிக்கவேண்டும் !!!

இது முழுக்க மாணவனின் / மாணவியின் தவறே !!!

1999 ஆம் ஆண்டு Interrupt for Beginners என்று C மொழியில் B.Sc ப்ராஜெக்ட் செய்தோம் ! நான் பெரிய அளவில் செயல்படவில்லை என்றாலும், என்னுடைய தோழர் மணிவண்ணன் தனசேகரன் (திண்டிவனத்தை சேர்ந்தவர், இப்போது DELL நிறுவனம், பங்களூரிவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்) முழுமூச்சாக உழைத்தார். இந்த ப்ராஜக்ட் C மொழியில் உள்ள எடிட்டரில் சிறு மாறுதல்கள் செய்து அதனை சிறப்பாக மாற்றுவதாகும் ! அந்த புராஜக்ட் செய்து 7 ஆண்டுகள் கழித்து 2007 இல் பார்க்கும் வேலையினை விட்டு வேறு ஒரு வேலை மாறுவதற்காக இண்டர்வியூவை சந்திக்கும்போது, இண்டர்வியூ எடுத்தவர் புராஜக்ட் பற்றி நிரம்ப கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டார் ! எனக்கு வேலைக்கான ஆபரும் தந்தார்.  இது ஒரு எடுத்துக்காட்டு !

ப்ராஜட் என்பது நீங்கள் செய்யவேண்டியது. அதனை பணம் கொடுத்து எக்காரணம் கொண்டும் வாங்காதீர்கள். 4 மாதம் ஊர் சுற்றினால் கூட குறைந்தபட்சம் கடைசி 2 மாதத்தில் உட்கார்ந்து ப்ராஜக்ட் செய்யுங்கள். அல்லது உங்கள் ரெஸ்யுமோடு சென்று நிறுவனங்களின் கதவை தட்டுங்கள். உங்கள் ப்ளேஸ்மெண்ட் டைரக்டரை வம்புக்கு இழுத்து (நகைச்சுவைக்காக) அவர் மூலமாக அவர் உதவியோடு ஏதாவது ஒரு சிறிய நிறுவனத்தில் உங்கள் ப்ராஜக்டை செய்யுங்கள்.

இது ஒரு WIN - WIN சிச்சுவேஷன். ஒரு சிறிய நிறுவனத்தில் நீங்கள் உங்களுடைய லேப்டாப்பை உபயோகப்படுத்திக்கொள்கிறேன், உங்களுடைய தேவை ஒன்றை (HR சிஸ்டம், அட்மின் மேனேஜ்மெண்ட், அவர்களுடைய மொபைல் அப்ளிக்கேஷன், அல்லது அவர்களுடைய வெப்-சைட்) நீங்கள் கம்யூட்டரைஸ் செய்து தருகிறேன் என்று சொன்னால் (சம்பளம் தேவையில்லை) அது அவர்களுக்கு லாபம் தானே ? அதே சமயம் உங்களுக்கும் ஒரு ப்ராஜக்ட் எப்படி செய்வது என்ற உண்மையான அனுபவம் கிடைக்கும் !

நீங்கள் IT / CS டிப்பார்ட்மெண்ட் ஆக இருந்து எதாவது ஒரு சிறிய IT கம்பெனியில் சம்பளம் இல்லாமல் நான் வேலை செய்கிறேன், என்னுடைய ப்ராஜக்ட்டை இங்கே செய்துகொள்கிறேன் என்று சொல்லி HR இடம் கேட்டு பாருங்கள். அவர்களை பொறுத்தவரை இது லாபம் தான். அதே நேரம் அந்த இரண்டு மூன்று மாதத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றினால், அந்த நிறுவனம் உங்களை 100 சதவீதம் தன்னுடைய எம்ப்ளாயி ஆக மாற்றிக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேம்பஸிலோ, ஆப் கேம்பஸிலோ செலக்ட் ஆகவில்லை என்றாலும் இந்த ரூட் மூலமாக நீங்கள் எளிதில் ஒரு வேலையை பிடிக்கமுடியும். Trust Me !!

இந்த பதிவு எழுதும் நோக்கமே, இது பலரை சென்றடையும், அதன் மூலம் மாணவ மாணவிகள் சிறு நிறுவனங்களின் கதவை தட்டுவீர்கள் என்பதே ! உங்கள் தோழர்கள் / தோழிகள் நார்த் இண்டியன்ஸ், மலையாளி ஆக இருந்தால், அவர்களுக்கு இந்த பதிவை ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்கள்.

வெற்றி உங்களுடையதாகட்டும் !!!

4 comments:

கவிதா | Kavitha said...

ரவி,மனித வளத்தில் இருப்பதால் சொல்கிறேன். நான் வேலைப்பார்த்த நிறுவனங்கள் சிறியவையே. அதில், ப்ராஜக்ட் வேண்டும் என்று வரும் எவரையும் சேர்த்ததில்லை. காரணம் Office Infrastructure. ப்ராஜெக்ட் செய்பவர் பணம் எதும் பெறாமல் செய்கிறார் என்றார் கூட அவருக்கான கணினி, அமரும் இடம், அவருக்கு ப்ராஜக்ட் சம்பந்தமாக உதவ, ஊழியர்கள் யாரையும் நேரத்தை ஒதுக்கி உதவ முடியாத நிலைமை போன்ற பலக்காரணங்களுக்காக யாரையுமே அனுமதிப்பதில்லை.

அலுவலகம் சாராத ஒருவர் வந்து ப்ராஜக்ட் செய்யும் போது அவரை அலுவலக அன்றாட கட்டுப்பாட்டில் சேர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதாவது அலுவலகம் வரும் நேரம் போகும் நேரம், அவரின் வேலையை கண்காணிப்பது, அலவலகம் சார்ந்த ப்ராஜக்ட் விசயங்கள் அவரின் மூலம் வெளியில் செல்லாமல் இருப்பது போன்ற விசயங்களிலும் பிரச்சனைகள் இருக்கின்றன.

சம்பளம் இல்லாமல் கூட வெளி ஆட்களை குறிப்பாக உள்ளே அனுமதிப்பதென்பது சரியான அனுகுமுறையல்ல. அப்படியே அனுமதித்தாலும் கூட அவர்களின் அக்ஸஸ் ரொம்ப குறுகியதாக, எதையும் எளிமையாக முழுமையாக செய்யும்படியாக அமையாது.

ரவி said...

The Whole point is, we must start looking at this option and fix these issues and provide opportunities to young ones.

அணில் said...

இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். ஒரு புறம் இப்படியென்றால் பிற துறை பாடப்பிரிவில் விழுந்து விழுந்து ஆர்வத்துடன் ப்ராஜெக்ட் செய்தவர்கள் ஐ.டி யில் பணியாற்றுவது தனிக் கதை. மேல்தகவல்: சுற்றுச்சூழலியல் பட்ட மேற்படிப்பில் (M.Tech Environmental science)பல்கலைக்கழக அளவில் முதல் மாணவரான என் நண்பர், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டாராக்ப் பணியாற்றுவது நெருடுகிறது.

Unknown said...

Unmaithan