சின்ன வயதில் - ஒரு அஞ்சாப்பு படிக்கும்போதுன்னு வைத்துக்கொள்ளுங்களேன்...என்னோட அப்பா தினமும் ரெண்டு ரூபாய் கொடுப்பார்...மற்ற பிள்ளைகள் எல்லாம் எதாவது வாங்கும்போது நான் மட்டும் சும்மா இருப்பேன்...எல்லாம் எதற்கு தெரியுமா...அந்த மாத இறுதியில் வரும் லயன் முத்து காமிக்ஸ் வாங்க உபயோகிப்பேன்...
ஒரு முறை திருச்சியில் பேருந்துக்காக காத்திருந்தபோது பாக்கெட்டில் இருந்தது 100 ரூபாய்...வீட்டுக்கு போவதற்காக காத்திருக்கிறேன்...அங்கே ஒரு கடையில் லயன் முத்து காமிக்ஸ் புத்தகங்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்தேன்...அத்துனை பணத்துக்கும் காமிக்ஸ் வாங்கிக்கொண்டு திரும்ப கல்லூரிக்கே நடந்து வந்தேன்...
இப்போது தகவல் தொழில்நுட்ப மென்பொருள் கூலியாக பெங்களூரில் பணியாற்றும்போதும் சரி...ஆர்வம் குறையவில்லை...ஒருமுறை சிவகாசிக்கு மணியார்டர் அனுப்பி புத்தகங்கள் வாங்கியுள்ளேன்...
என்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்த இந்த பதிவு இடுகிறேன்...முதலில் இணைய தளம் மூலம் காமிக்ஸ் விற்பனை பற்றி...
பல இணைய தளங்களில் தமிழ் புத்தகங்களை விற்கிறார்கள்...( பார்க்க : வித்லோகாவின் காமதேனு) நமது லயன் இணைய தளத்திலும் புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் முறையை கொண்டு வந்தால் என்ன ?
அரதப்பழசு மணியார்டர் முறை போஸ்ட் கார்டில் ரிப்ளை செய்யும் முறையும் தேவையா ?
பெரும்பாலான நேரம் நமது லயன் காமிக்ஸ் இணைய தளமும் வேலை செய்யவில்லை...
எப்போதாவது இயங்கும்போது கூட நாம் அதில் போடும் பின்னூட்டங்கள் ஏறுமா என்பது தெரியாது...(ஏற்கனவே பல பின்னூட்டங்கள் அளித்து, தளம் வேலை செய்யாமல் எழுதியது வீண் ஆனது தான் மிச்சம்)
போகோவும், ஜெட்டிக்ஸும் சுட்டிகளின் வீட்டுக்கே சென்று அவர்களின் இதயங்களை ஆக்ரமித்து, வாசிக்கும் பழக்கத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் போலிருக்கிறது...
நமது வருங்கால தலைமுறைக்கு இந்த காமிக்ஸ்களை கொண்டு சேர்க்க வேண்டும், இல்லை என்றால் ஏற்கனவே காமிக்ஸ் ரசிகர்களாக இருக்கும் வளர்ந்த குழந்தைகளோடு இந்த காமிக்ஸ் உலகம் அழிந்துபோகும்...
வாசகர் ஹாட்லைனை இணையத்தில் எழுதுங்க...இணைய தளங்களில் விளம்பரம் செய்யுங்க...இணையத்தில் புத்தகங்கள் விற்பனையை சாத்தியமாக்குங்க...இவை எல்லாம் செய்யாமல் போனால்...நினைத்து பார்க்கவே பயமாயுள்ளது...
விழிமின், எழுமின் என்று கடைசி தடவையாக சொல்லிக்கொள்கிறேன்...
இப்படியெல்லாம் சொல்வதால் நான் வெறுப்பை உமிழ்கிறேன் என்று அர்த்தம் செய்துகொள்ளவேண்டாம் மற்ற வாசகர்கள்...நமது காமிக்ஸின் இன்றைய நிலைகண்டு சொல்லொனா துயர்கொண்டு வந்த வேதனையில் எழுதும் கடிதம்...