பாடகி சின்மயி, கமிஷனர் அலுவலகத்தில் இரண்டு புகார்களை அளித்துள்ளார். ஒன்று அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பாளர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்பது. மற்றையது தமிழ் இணைய ட்விட்டர் உலகில் இருக்கும் சிலர் தனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் / தொந்தரவு தருகிறார்கள் என்று. அதில் ஒரு குறிப்பிட்ட நபர் (ராஜன் இல்லாத மற்றைய ஒருவர்) மீது மேலும் கடுமையான புகாரை சொல்லியிருக்கிறார்...
இதில் ராஜன் தவிர்த்து மற்றைய யாரும் எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு முறைகூட தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் அல்ல. அதனால் அவர்கள் செய்த தவறுகள் என்ன என்பதை பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் பாடகி சின்மயியின் மாடஸ்டியை குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் இணைய உலகில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவருக்கு மிரட்டல் விடுத்திருந்தாலோ அல்லது அவருக்கு மன உளைச்சல் தந்திருந்தாலோ அதற்கு காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
தமிழக காவல்துறை, அதிலும் சைபர் க்ரைம், தமிழ் இணைய உலகுக்கு பரிச்சயமானது தான். தமிழ் இணையத்தில் அனைவரையும் ஆபாச அர்ச்சனை செய்துவந்த ஒரு சைக்கோவை வெறும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் வைத்து டவுசரை கழட்டி உட்காரவைத்தவர்கள். கூகிள் / ட்விட்டர் / யாஹூ உட்பட அனைத்து நிறுவனங்களும் தமிழக காவல்துறை அனுப்பும் மின்னஞ்சலுக்கு உடனே பதில் தருகிறார்கள். மின்னஞ்சல் முகவரி / ட்விட்டர் முகவரியை உருவாக்கியதில் இருந்து என்ன என்ன எழுதியிருந்தாலும் (டெலீட் செய்யப்பட்டவை உட்பட) முழுமையான பி.டி.எப் கோப்பாக அனுப்பிவிடுகிறார்கள். ஆகவே இதுபோன்ற சைபர் குற்றங்களில் தமிழக காவல்துறையின் அனுபவம் பற்றியோ, அல்லது அவர்களின் வேகம் பற்றியோ எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை...
ஆனால் இந்த குறிப்பிட்ட புகார் எப்படி தொடங்கியது என்பது பற்றி எனக்கு தெரிந்த வகையில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்...(சமீப காலங்களில் ட்விட்டர் முகவரி உருவாக்கியவர்களுக்கு இது பற்றி தெரியாது, அவர்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்பதை விட, டெல்லியில் இருந்துகொண்டு என்னால் சைபர் க்ரைம் காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆகி விளக்கம் கொடுக்க இயலாத நிலையில் என்னால் முடிந்த வகையில் ஆரம்பகால தகவல்களை பதிவு செய்து வைப்பது என் கடமை என்று கருதுகிறேன்).
மேலும் பொதுவாகவே பெண் புகார் கொடுத்தால் இளகும் மனம் உள்ள காவல் துறையினர், பாடகி சின்மயி போன்ற ஒரு பிரபலம் / செலப்ரட்டி புகார் கொடுத்தால் எதிர் தரப்பில் உள்ள சிவிலியன்கள் (ராஜன் உட்பட), என்ன சொல்லியிருக்கிறார்கள் / செய்திருக்கிறார்கள் என்று அவர்களது விளக்கத்தை தர கூட அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறியே...!!! அதனால் இது போன்ற விளக்கத்தை எழுதி, எனக்கு தெரிந்த காவல்துறை நன்பர்கள் மூலம் அவர்களுக்கு முன்பே கிடைக்குமாறு செய்வதும் இந்த பிரச்சனையில் இரண்டு தரப்பையும் விளக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். (மேலும் இந்த வாரம் தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் பெரிதாக ஏதும் நடைபெற்றிருக்காது என்று நம்புகிறேன்)..
பீடிகையிலேயே பீடி குடிக்க போகும் அளவுக்கு ப்ளேடு போடாதே ரவி விஷயத்துக்கு வா என்று அண்ணன் உண்மைத்தமிழன் அலறுகிறார்...!!
- பாடகி சின்மயி ட்விட்டருக்கு வந்தபோது உற்சாகமாக அனைவரும் பாலோ செய்தோம், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவரது கருத்துக்களை தெரிந்துகொள்ள....
- இலங்கை படையினர் தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற ஒரு நிகழ்வின்போது, மீனவன் மீனை கொல்றான், சிங்கள படையினர் மீனவனை கொல்றான் என்ற வகையில் ஒரு ட்வீட்டை இட்டார். இது பரந்துபட்ட அளவில் அனைத்து தமிழ் ட்வீட்டர்கள் மத்தியில் எதிர்ப்பு எழ காரணமாக இருந்தது. தமிழ் உணர்வாளர்கள், நடுநிலையாளர்கள், பெண்கள் என அனைவரும் பாடகி சின்மயிக்கு எதிராக தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை எழுதினார்கள். பாடகி சின்மயி, இதற்கு மறுப்போ மன்னிப்போ தெரிவிக்காமல், நான் ப்ராமின் என்பதால் என்னை தாக்குகிறீர்கள் என்ற ரீதியில் - சரியாக நினைவில்லை - எழுதினார். அதே நேரம் அவரை கேள்வி கேட்டவர்களை எல்லாம் தடை செய்தார். இந்த குறிப்பிட்ட நிகழ்வின் போது நான் ட்விட்டரில் ஆக்டிவ் ஆக பங்கேற்க இயலாத வகையில் பணி சுமை இருந்தது. அதனால் நான் இதில் கலந்துகொள்ள இயலவில்லை...
- சாதி ரீதியான இட ஒதுக்கீடு தவறு என்று தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை தூற்றி எழுதினார். பொருளாதார அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் சொன்னார். இது அவரது கருத்து என்ற வகையில் அல்லாமல், வன்மம் தெறிக்கும் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருந்தார். நானும் என்னைப்போல மற்றவர்களும் அவரை கேள்வி கேட்டோம். சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுத்து அதன் படியே இட ஒதுக்கீடு அமையவேண்டும் என்று நான் அவரிடம் விவாதம் செய்தேன். விவாதம் என்னவோ ஆரோக்கியமான வகையில் தான் சென்றது. ஆனால் ஒரு பிரபலம் / செலப்ரட்டி என்பதற்கான எந்த மெச்சூரிட்டியும் இல்லாமல் தன்னுடைய கருத்தை எதிர்த்து கருத்து சொன்னவர்களை எல்லாம் க்ளிக் / ப்ளாக் (தடை செய்வது) செய்தார். ஒரு கட்டத்தில் தமிழில் பதில் சொன்னவர்களை எல்லாம் தடை செய்தார். குறைந்தபட்சம் 100 பேரையாவது தடை செய்திருப்பார் என்பது என் கணிப்பு. பள்ளிக்கூட பிள்ளைகள் டூ விடுவது போல மிகையான இம்மெச்சூரிட்டியோடு நடந்துகொண்டார்...
இது தான் ஆரம்பம்.
இதன் பிறகு ராஜன் என்ன சொன்னாலும் அது தன்னை நோக்கித்தான் சொல்கிறார் என்ற வகையில் நடந்துகொண்டார். அதற்கு தூபம் போடுவது போல அவருடைய பாலோவர் ஆக இருக்கும் சில தோழர்கள் / தோழிகள் அவருக்கு தவறான வழிகாட்டியாக இருந்து "ஏய் அவன் உன்னைத்தான் சொல்கிறான்" என்பது போல அந்த ட்வீட்டுகளை எல்லாம் படம் எடுத்து பாடகி சின்மயிக்கு தொடந்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்...
ஒரு படத்தில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய முயலும் வைகை புயல் வடிவேலு, புரோக்கராக செயல்பட்ட சிங்க முத்துவுக்கு கமிஷன் தொகையினை தர மறுக்க, சொம்பு கேட்கிறான், தங்க சொம்பு கேட்கிறான் என்று சொல்லியும், அதிலும், வடிவேலு காலை தூக்கி கொசு அடிக்க, "அங்க பாரு சொம்புக்காக ஒத்தை காலில் நிற்கிறான்" என்று ஒரே போடாக போட்டு தரும அடி வாங்க வைத்து கல்யாணத்தையே நிறுத்துவார்...
இறுதியில் அந்த நிலையானதுங்க இந்த பிரச்சனை...
ராஜனை பொறுத்த வரை இது தான் நேர்ந்தது. ஆனால் ராஜனுக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துக்கொண்டு சில அல்லக்கைகள் ஓவராக நடந்துகொண்டார்கள், (அதிலும் குறிப்பிட்ட ஒருவர் படு ஆபாசமாக பேசியிருக்கிறார் )..அவர்களை கண்டறிந்து (அதற்கான ஸ்க்ரீன் ஷாட் எல்லாம் பாடகி சின்மயி கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்) தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அதன் மூலம் தமிழ் இணையத்தில் பெண்கள் மேலும் சுகந்திரமாக இயங்கும் நிலை ஏற்படவேண்டும் என்பது சரியானதே...
இதை பற்றி மேலும் பார்த்தோமானால், பொதுவாகவே தமிழ் இணையத்தில் பெண்கள் சுகந்திரமாக இயங்க இயலாத சூழ்நிலை கடந்த ஒரு ஆண்டாகவே ஏற்பட்டது. பெண்கள் தொட்டா சிணுங்கிகளாக இருக்கிறார்கள் என்பதை விட, அடிப்படை மனித பண்புகள், தனிமனித ஒழுக்கம் இல்லாத வீணாப்போனதுகளும் ட்விட்டர் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பங்கேற்க தொடங்கியதும் ஒரு காரணம். இதற்கு காரணம், நமது கல்வி முறை. ஒழுக்கத்தை கட்டுப்பாடாக கற்பிக்கிறோமே தவிர, அதனை ஒரு வாழ்வியல் முறையாக கற்பிப்பது இல்லை. இதற்கு காரணம் மெக்காலே. ஆங்கிலேய ஆட்சி. இப்படி காரணம் சொல்லிக்கொண்டே போகலாம். இவை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மாறப்போவதில்லை. பெண்கள் தான் மாற வேண்டும். you have to be more stronger in the social networks. நெல்லில் அடித்தால் கல்லில் அடியுங்கள். இது தான் தேவை. இதன் மூலம் தான், படிப்பினை தந்து மாற்றத்தை கொண்டுவர முடியும். கொஞ்சம் off topic ஆக போகிறேன் என்று நினைக்கிறேன்...!!
நான் சொல்ல நினைத்ததை கன்வே செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்...!!
மேலும் ராஜனோ அல்லது அவரது டிசைப்பிள்ஸோ வேறு என்ன வகையில் பாடகி சின்மயிக்கு மன உளைச்சல் தந்தார்கள் என்பது பற்றி வேறு தகவல்கள் எதுவும் எனக்கு தெரியாத நிலையில், எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டேன்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ராஜன் உட்பட இந்த பிரச்சனையில் இருக்கும் யாரையும் நான் சந்தித்ததே இல்லை. ராஜனிடம் மட்டும் சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன்...வேறு ஒரு பிரச்சனையில், மனித தன்மை இல்லாமல் நடந்துகொண்ட ராஜன் உட்பட அனைவரையும் ப்ளாக் செய்துவிட்டேன்..இதனால் இவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் எழுதுவதும் இவர்களுக்கு போகாது :)))
எல்லோரும் வாழ்க வளமுடன்...
பி.கு: சில மாதம் முன் சென்னை சென்றிருந்தபோது, பாடகி சின்மயியை சந்தித்து இது குறித்து விளக்கம் தர முயன்றபோது, அவர் நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவில்லை...
(பதிவில் உள்ள படம் உதவி : விக்கிபீடியா)








